Free Typing Work Daily Earn Money

தமிழ் கவிதைகள்

                   தமிழ் கவிதைகள்


Sunday, July 7, 2013

கரையாத நினைவுகளோடு... !




சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள‌
உன் பார்வை ஒவ்வொன்றையும்!

கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!

உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.

நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!

நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.

கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்

அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!

உன் பார்வையின் இன்னும் பல‌
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
 ....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!

Sunday, July 10, 2011

தீராத பார்வைகள்...!


சங்காத பார்வை
என் உரிமை நீ
என சொல்லாமல்
சொல்லும் பார்வை!

இந்த பெண்ணிற்கென்ற
கனவு உலகில் நுழையும்
அதிகாரம் பெற்று
என் கனவுகளையும்
காட்சிகளாக்கும்!

ஒரு நிமிடப்பார்வை
 உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!

வார்த்தைகளற்ற பொழுதுகளில்
மனதில் வழியும் நேசம்
க‌ண்க‌ளில் மின்ன
புன்னகைத்து பேசிச் செல்லும்!

உன் விழி தீண்ட‌லில்
என் பெண்மை விழித்துக்கொள்ள‌
வெட்கை போர்வைகொண்டு
உன் முகம் பார்க்க 
முடியாமல் தவிக்க வைக்கும்!

அணைக்க மறந்து
விரல் கூட தீண்டிடாமலே
பார்வை ஸ்ப‌ரிச‌ங்க‌ளாகி
உள்ளம் தொட்டு
உயிரில் தங்கும்!

தீராத உன் பார்வைகள்
தித்திக்கும்
நித்தம் என்னை அழகாக்கும்!

காணும் நொடிகளில்
எனக்குள் உன்னை தேடி
கண்டெடுக்க முடியாமல்
என்னுயுரிலே கலந்து
உணர்வுகளின் உச்சத்தை
தாங்கி நிற்கும்!

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!

உன் விழித்தீண்ட‌
யாசிக்கும்
என் கவிதைகளானாலும்
கவிதையான
உன் பார்வைகளே
நான் பெற்ற பாக்கியமடா...!

காதல் பூத்திருக்கும்
உன் பார்வையால்
கவிதை எழுதுகிறது
என் கண்கள்!

Tuesday, February 1, 2011

எனக்கே..... எனக்கானவனாய்!


வெளியில் அழைத்துச்செல்கையில்
ஆசையுடன் பார்த்தாலே
பிடிச்சிருக்கா எனக்கேட்டு
விரும்பும் பொருட்களை
வாங்கி கொடுக்கும் போது
தாயாகிறாய்!
வீடு திரும்பியதும்
பசிக்கிறது எனக்கேட்டு 
பாசத்துடன் நான் பரிமாறுவதை
ருசித்து உண்ணும் போது 
சேயாகிறாய்!

தெரியாத நல்ல விஷயங்களை 
பொறுமையாய் 
விளக்கி சொல்கையில் 
தாயாகிறாய்!
அதே அறிந்தவைகளை 
தெரிந்தும் தவறிழக்க செய்துவிட்டு
செல்ல திட்டுகள் பெற்று 
முழிக்கையில் சேயாகிறாய்!

உடல் நலக்குறைவால் 
சோர்ந்துப்படுக்கும் எனக்கு 
உணவளித்து மருந்தளிக்கையில் 
தாயாகிறாய்!
நீயோ
உடல் நலமின்றி இருக்கும்போது
பக்கமிருத்தி என்னை
அணைத்துக்கொண்டு உறங்குகையில் 
சேயாகிறாய்!

சோகங்களில் கலங்குகையில்
தலைக்கோதி
மார்பினில் சாய்த்து 
என் நெற்றியில் முத்தமிட்டு
ஆறுதல் புரியும் போது
தாயாகிறாய்!
என்னடா... என்னாச்சிடா என்ற‌
அன்னையின் பரிவான‌
சொல்லுக்கு ஏங்கும் குழந்தைப்போல
மனதறிந்து கேட்கையில்
என் மடியிலே கலக்கங்களை 
புதைத்துக்கொள்ளும் போது
சேயாகிறாய்!

இப்படி தாயாய் சேயாய் தொடர்கையிலும்
சின்ன சின்ன குறும்புகளுடன்
உணர்ச்சிகளை தூண்டும்போதும்......
செல்ல செல்ல சீண்டல்களுமாய் 
சண்டை பிடிக்கும்போதும்......மட்டும்

நீ... 
எனக்கே..... 
எனக்கானவனாய் இருக்கின்றாய் !

Sunday, November 21, 2010

பொக்கிஷம்!


ண்ண‌ற்ற பரிசுகள்
உன்னிடமிருந்து
முதல்பார்வை கொண்டு 
இன்றுவரை 
ஒவ்வொன்றும் 
ஒரு பொக்கிஷமாகவே!

ஜெபமாலை......
சிறிது ஏமாற்றம்தான் என்றாலும்
உன்னிடமிருந்து 
முதலாய் வ‌ந்த பெருமையதற்கு...
தெய்வத்திடமிருந்தே ஆரம்பம் 
நமதுறவு என்பதால்!

காய்ந்தப்பின்பும்
காதலுடன் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும் 
உன் அன்பைப் போலவே!

என்னில் நீ ரசிப்பவைகளில் 
என்றும் முதலிடம் பிடிப்பது
என் நெற்றி பொட்டு......

அன்று நீ வாங்கிக்கொடுத்தது 
இன்றும் என்னிடம் 
பத்திரமாக‌!

குழந்தையின் பாதமாக 
எண்ணி கொஞ்சிடும் நீ 
அழகுபடுத்திட‌ பரிசளித்தாயே 
தங்க கொலுசு......
என்றுமே என் கால்களை தழுவியபடி
வைக்கும் ஒவ்வொரு அடியிலும் 
எழும் சலங்கை சப்தம்
உன்னை நினைப்படுத்திக்கொண்டு!

என்னை நினைத்து எழுதிய 
கவிதை பக்கங்கள்….....
எனக்காக பார்த்து பார்த்து 
வாங்கிய ஆடைகள்….....
கடைசியாக
என் பிறந்த நாளுக்கு
பரிசளித்த கைகடிகாரம் வரை 
அனைத்துமே என்னிடம் 
பொக்கிஷங்களாக‌……..

நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும் 
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!

Thursday, September 30, 2010

ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!!!

அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!

மிக சாதாரனமாக‌ வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது….குறிப்பாக பெண்களை ரசிப்பதில். பெண்கள் ஆண்களால் ரசிக்ககூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிற‌து என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆண்கள் அனைவருமே ரசனைமிக்கவர்கள் என்பதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு. அப்பாவில் ஆரம்பித்து தம்பிகள், கஸின்கள், கல்லூரி நண்பர்கள், என்னவர் என அனைவருமே நல்ல ரசனை உணர்வு படைத்தவர்கள்தான்.

நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை என் செயல்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டு இருப்பவர்… ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்து சுடிதாருக்கு மாறிய போதும் சரி, திருமணக்கோலத்தில் என்னை கண்ட போதும் சரி என்னை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்த என் அப்பா………

அக்கா உனக்கு இது நல்லாயில்ல, இது நல்லா இருக்கும் என்பதாகட்டும், அதுவரை ப்யூட்டி பார்லர் போகாத நான் தோழியின் ஆலோசனைபடி என் நிச்சயதார்த்தம் அன்று மேக்கப் போட்டுகொண்டு வந்து நின்ற போது, ‘நீ சாதாரனமாவே நல்லாயிருப்பியே’ என்று சொன்ன‌ இவர்களின் விருப்பப்படி ப்யூட்டி பார்லர் போகாமலே திருமணத்திற்காக‌ நானே என்னை அலங்கரித்துக்கொண்ட போது ‘ஆங் இதுதான் எங்க அக்கா’ என சொல்லி என்னை மகிழ்வித்த தம்பிகள், கஸின்கள்………

நட்பின் உரிமையில் உனக்கு இதுதான் எடுப்பா இருக்கு, இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இல்ல, இந்த செருப்புதான் உன் காலுக்கு அழகா இருக்கு என சொல்வதில் ஆரம்பித்து, புரியும் செயல்கள் அனைத்தையும் உடன் இருந்து ரசித்து, இவர்கள் இத்தனை கூர்மையாக கவனிப்பார்களா, இவ்வளவு ரசனைமிக்கவர்களா ஆண்கள் என உணர்த்திய எனது கல்லூரி நண்பர்கள்……

என்னை ரசித்து பின் என் சின்ன சின்ன செயல்களையும் ரசித்து, இந்த பிறவியை ரசித்து வாழ்ந்திட இறைவன் எனக்களித்த வரமாக நான் நினைக்கும் என்னவர்……

இவர்களை தொடர்ந்து இன்று நான் சந்தித்து வரும் இனைய நண்பர்கள்.... இவர்களை பற்றி என்ன சொல்வது!!! நான் வரைந்த சித்திர பெண்ணழகை ரசித்து வர்ணித்து இவர்கள் எழுதிய கவிதைகள் படியுங்கள், உங்களுக்கே புரியும்... ஆண்கள் எவ்வளவு ரசனை மிக்கவர்கள் என்று. ஓவிய பெண்ணிற்கே கவிதையால் உயிர் கொடுக்க‌ நினைக்கும் ஆண்கள் இவர்கள். இப்பொழுது சொல்லுங்கள் தோழிகளே, ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தானே இருக்கமுடியும்!!!



துப்பட்டா தேவதை





தென்றல் காற்றில்
பறக்கும் பார்வையை
வீசி செல்லும்
யார் இந்த
தேவதை
துப்பட்டா
தாரிகை !!!
                 …சிவா
துப்பட்டா என்னும்
என் தேவதையின் சிறகுகள்
பறக்கத்தானே செய்யும்..
                        …ப்ரியமுடன் வசந்த்

துப்பட்டாவில் படபடக்குதென் உசிரு
உன் பார்வை பட்டு(ப்) புள்ளியானேன்
கட்டிக் கொள்ளு இல்லைக் கண்ணை மூடு! :)
                                                                 …பாலன்

தேவதைக்கு இறகு இருக்குமாம் - பறக்க
ஆனால் பார்தவர்கள் யாரும் இல்லை
இன்று
உன் வண்டியில் நீ வரும் போது
காற்றில் பறந்த உன் துப்பட்டா - என்
கண்ணுக்கு தெரிந்தது அது இறகாக
                                                            …புதுவை சிவா

 
ராத்திரி வானின் ஒரு துண்டை
ரகசியமாய் திருடிவந்து
துப்பட்டா செய்திருக்கிறாய் காற்றில்
துடித்து பகல் வானத்திடம்
ஒழுங்கு காட்டுகிறது உன் துப்பட்டா...
                                                                     …சீமான்கனி

சுருண்டு நெளிந்து நீண்டு விழும்
கூந்தல் அருவியில்
சிக்கிக் கொள்ளும் ஒரிதழாவாவது
மாறேனோ?
                                      …பாலாஜிசரவணா

பாவையின் பார்வையிலே
பொய் கோபம் தெரியுதடி
கோவலன் நானிலையோ
கோபிக்க மாட்டாயோ
                                  …தினேஷ்குமார்
குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்

தேன் இனிக்கும் உதட்டில்-தீந்
தமிழ் நழுவும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்

காற்றிலே சேலை
வானவில்லான போதும்

நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
                                                              …யாதவன்

 
ஒ பெண்ணே எனக்கு மட்டும்
உயிர் கொடுக்கும் சக்தியிருந்தால்
நொடியில் உன்னை என்னவளாக
மாற்றியிருப்பேன் .காலந்தோறும்
கவிபாடியிருப்பேன் இப்படி ஒற்றை
கவியில் புலம்ப வைத்து விட்டாயே..!!
                                                                       …ஜெய்லானி

Saturday, June 5, 2010

காதல் செய்வோம் வா!

 கையுடன் கைக்கோர்த்து
என்னை அழைத்து சென்று
சொல்லிவிடு...
என்னவெல்லாம்
பேச நினைத்தாயோ
அவை அத்தனையும்!
என் காதோர‌ம் நெருங்கி வா
மெண்மையாக‌ சொல்லிவிடு...
நான் கேட்க‌ விரும்பும்
அனைத்தையும்!

என்னை தொடு
என் இத‌ழ்க‌ளை சுவைத்திடு
என்னுள் ஆழ‌மாக இருக்கும்
உண‌ர்வுக‌ளை வெளியேற்றிடு!
காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி அனைத்து
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!

அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!
என்னுடைய‌ இர‌வுக‌ளில்
 ப‌க்க‌மிருந்து
வெளிச்ச‌ம் கொடு!
என் பக‌ல்க‌ளில்
நீ ஒருவ‌ன் ம‌ட்டுமே
என‌க்காக‌ என்ப‌தை காட்டிடு!
 தடைகளை தகர்த்து
என் இதயத்தில் நுழைந்திடு!
நீ என்னுள் இருக்கும்
தருணத்தை பார்க்கும் நேரமிது!

உன்னுள் சிறைப்பட்டிருக்கும்
என்னை இன்னும் தெரியவில்லையா...
என் விலங்குகளை உடைத்து
விடுதலை தந்துவிடு!
மனதின் ஆழத்தில் இருக்கும்
என்னை வெளிக்கொண்டு வந்திடு
இப்பொழுது நான் தயாராக இருக்கிறேன்
காதல் செய்வோம் வா!

Thursday, April 1, 2010

ஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது!




விக்கின்ற ணர்வுகள்

னம் புரியாத ஓர் உணர்வு 
உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று !

பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !

சந்தோஷங்களில் மூழ்குகின்ற‌ உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற‌ உணர்வு !
உண‌ர்வுக‌ள் அலைமோதிட‌ 
உணர்ச்சிக‌ள் த‌தும்ப‌
இத‌ய‌த்தின் ஆழ‌த்தில் எழுதிய‌ உண‌ர்வு !

பலப்பல கற்பனைகளை 
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும் 
படைத்த உணர்வு !

எண்ணற்ற மாற்றங்களை 
என் உள்ளம் சந்தித்த போதிலும் 
மாறாதொரு உணர்வு !
அதே உள்ளம் 
சோகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு 
உயிர் இழந்து 
முடிவாக எத்தனையோ விஷயங்கள் 
மறந்த போதிலும் 
மறக்காதொரு உணர்வு !

சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும் 
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே 
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !

*******************************************************


ச்சும்மா வரைஞ்சது !!!


***********************************************************

திவுலகில் சில வாரங்களாக தொடர் பதிவுகள்.... விருதுகள்.... என்று தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எனக்கு கிடைத்து இருக்கும் இரண்டாவது விருது இது.


இந்த விருதை அளித்த தோழி பத்மாவுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மிகவும் சந்தோஷத்துடன் இந்த விருதினை நானும் சில நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


Monday, March 8, 2010

இரண்டாம் வாய்ப்பு !




ன்றொரு நாள்
எனக்கு அறிமுகமானவன் நீ
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் !
நினைத்து பார்க்கையில்
வலிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.
எவ்வளவு நெருக்கமாக
உணர்ந்தேன்
ஏதோ ஒன்று
வெகு ஆழமாக
நீ - என்னில் பாதியாக……
என் உயிரில் பாதியாக……
என் இதயத்தின் பாதியாக…..
ஒவ்வொரு விடியலும்
உன்னாலே….
காண முடியாத
ஒவ்வொரு நாளும்
கடினமாகவே……
வருந்துகிறேன்
என் மவுனத்தில் கரைந்த 
அந்நாட்களை நினைத்து. 
சொல்லியிருக்க வேன்டும்
ஏதாவது
எப்படியாவது
நீ புரிந்துகொள்ளும் வகையில் !
வேறொரு நாள் 
பிரிந்தோம்.
நம்மிடையே இடைவெளி
நாம் பேசுவது நின்றுப்போனது. 
என் தவறுதான்
என்னால்தான் !
மீண்டும்
நம்பிக்கை கொள்கிறேன்
இதை மாற்றக்கூடும்
என்னால் மட்டுமே !
எத்தனை இரவுகள்
வெகு நேரமாகியும்
தூங்காமல் தவித்திருக்கிறேன்
ஏன் தெரியுமா
நீ என்னுடன் இருந்திருக்கிறாய்
நெருக்கமாக
என் வசம் இழுத்து
உன்னை அனைத்திருக்கிறேன்
என் போர்வைக்குள் !
சற்று நினைத்துபார்
உணர்ந்துக்கொள்வாய்
உன்னில் பாதியாக – நான் !
எத்தனை முறை
என் உணர்வுகளை
கரைத்திருக்கிறேன்
கண்ணீரிலே !
காத்துக்கொண்டிருந்து இருக்கிறேன்
எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்
ஏங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்
உன் தொடுதலை உணர்வதற்காக‌ !
உன்னுடன் சேர்ந்திருக்க
உன்னுடன் கைகோர்த்திருக்க
 முத்தம்
ஒன்றினை கொடுக்க
ஒரு முறையாவது !
எத்தனை விடியல்கள்
உன்னை தேடியபடியே
விழித்திருக்கிறேன்
ஆனால் நீயில்லை !
சில நேரங்களில்
கற்பனையில் நீ
என்னுடன்
என்னில் அக்கறையாக
பேசிக்கொண்டிருக்கிறோம்……
மறுபடியும் !
எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னருகில் இருக்கும்
என் இரண்டாம் வாய்ப்பை !

***

(இது என் க‌விதை அல்ல‌… மொழிப்பெயர்ப்பு செய்வது ரொம்ப பிடிக்கும் என்பதால் என்னை கவர்ந்த‌  ஒரு ப்ரெஞ்சு கவிதையினை நான் தமிழாக்கம் செய்ததுதான் இது)

Monday, January 11, 2010

சின்ன சின்னதாய் சில‌ கவிதைகள்....

 ன் முன்னால்
தொலைந்து போன 
என் வார்த்தைகளை 
தேடிப்பிடித்து 
கவிதைகளாக்குகிறேன்
உனக்காகவே! 
கண்டெடுக்க உதவிய
உனக்கு
சமர்பிக்கவே !

 *************************** 

நீ படித்த
என் கவிதைகளோ 
சிறுகதையாக 
என்னுள் புதையுண்டுப்போன 
படிக்காத கவிதைகளோ 
தொடர்கதையாக‌......

***************************

நீ சோர்ந்து போகையில் 
என் கவிதைகளை வாசித்திரு 
இதமாக உன் இதயத்தை 
அது வருடி செல்லும் !
என் நியாபகம் வரும்போதெல்லாம்

என் கவிதைகளை நேசித்திரு 
உன்னை என்றும் உயிர்ப்போடு 
அது வைத்திருக்கும் ! 

***************************************************************

டந்த சில நாட்களாக நாடு முழுவ‌தும் பனியால் மூழ்கி கிடக்கிறது. ஆனால் நான் வசிக்கும் சவுத் ப்ரான்ஸில் மட்டும் எப்பொழுதும் குளிர் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இம்முறை இங்கேயும் அதிக குளிர் என்றும் நிறைய பனிமழை பொழியப்போவதாகவும் கடந்த மூன்று நாட்களாக டிவியில் அலர்ட் நியூஸ் வந்துக்கொண்டேயிருந்தது.
 
 

நான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த‌ அந்த நாளும் நேற்று வந்தது. வெள்ளை மழை பொழிய.... எங்கும் கொள்ளை அழகு! குளிரோ தாங்க முடியாத அளவில்....பனிப்போர்வையால் மூடியிருந்த பால்கனியில், பனியில் நனைந்துக்கொண்டே ஒரு ஹார்ட் வரைந்து ஐலவ்யூ எழுதி, ஒரு ரோஜா பூவும் வைத்து என்னவரை அழைத்துக் காட்ட, அவரும் ரசித்து உடனே ஒரு போட்டோவும் எடுத்து "என் ரொமாண்டிக் பொண்டாட்டியே, முதல்ல உள்ள வா" என்று அக்கறையோடு உள்ளே அழைத்து வந்துவிட்டார்.


இதுவும் சின்னதாய் ஒரு கவிதைதானே!?

Friday, December 4, 2009

அடுத்த பிறவியில்.....


ம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு. 
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க. 

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும் 
என்னுள் சுமக்க 
உன் தாயாக ! 

காலை விடியலின் 
முதல் உருவம் நானென்றாய் !
முதல் உறவாகவே….. 
உன் தாயாக ! 

உன் விழியில் நானென்றாய் !
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக ! 

கவிதைகளின் 
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக ! 

மடி சேர விரும்பினாய் !
என் மடியிலே சேர்த்துன்னை 
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக ! 

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக ! 

உலகை 
பரிசளிப்பேன் என்றாய் !
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு 
பெண்குழந்தை வேண்டுமென 
ஆசை உனக்கு. 
உன்னையே
என் சாயலில் 
பெற்றெடுப்பேன்
உன் தாயாக ! 

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

Thursday, November 12, 2009

நீ நீயாக……




ன் கண்களின் தேடல்கள்
என்னிடமே !

ன் இதழின் புன்னகைகள்
உன்னிடமே !

ன் நினைவுகளின் உறைவிடம்
என்னிடமே !

ன் கனவுகளின் நிறைவிடம்
உன்னிடமே !

மொத்தத்தில்
நீ... நீயாக இருப்பதும்
என்னிடமே !
நான்... நானாக இல்லாமல் போவதும்
உன்னிடமே !

Monday, November 2, 2009

வேண்டும்.....ஒரு ஊடல் !



கோபம் தனிந்து
பார்க்கும் கொஞ்சலான
உன் பார்வைக்காகவே…..

மொத்த காதலையும் சேர்த்து 
இதமாக இறுக்கும் 
உன் அனைப்பிற்காகவே…..

ஆழமான உறவினை உணர்த்தும் 
இதழ்கள் ஈரமாக கிடைக்கும் 
உன் முத்தத்திற்காகவே……

நான் 
வேண்டாம் வேண்டாமென 
பொய்கோபம் காட்டி 
உன்னை தள்ள 
நீயோ 
வேண்டும் வேண்டுமென 
என்னை இழுத்து 
புரியும் காதலுக்காகவே…..

வேண்டுகிறேன் 
தினம் தினம்
உன்னுடன் ஒரு ஊடல் !

Thursday, October 22, 2009

நினைத்து மகிழ்ந்திட…..




"ன் என்னை ரொம்ப பிடிக்குது" 
 என்றாள் அவள்
"ஏனென்றால் நீயொரு அழகான லூசு" 
 என்றான் அவன்
"ஏன் என்மேல் இவ்வளவு லவ்" 
 என்றாள் அவள்
"நீ உன் லவ்வை சொல்லவே இல்லையே, அதான்"
 என்றான் அவன்
"ஏன் நான் எழுதியவைக்கு பதில் இல்லை" 
 என்றாள் அவள்
"எழுதுவதை மறந்துவிட்டேன்...உன் வார்த்தைகளை கண்டப்பின்"
 என்றான் அவன்
"எதுவுமே… இடையூராக இருக்காது, நமது அன்பில்"
 என்றாள் அவள்
"யாருமே"
 என்றான் அவன்
"உன் உயிர் நான் என்றாயே, நிஜமா?"
 என்றாள் அவள்
"...... விட்டால் தெரிந்துக்கொள்வாயா…உனக்காக"
 என்றான் அவன்

 அவளாக நானும் 
 அவனாக நீயும்
 நம் எண்ணங்களின் 
 உரையாடல் தொடர்கிறது….. 
 வேடிக்கையாகவும் வலியோடும் !

Tuesday, October 13, 2009

ஆசை !

வார்த்தைகளில் மறைந்திருக்கும்
என் உணர்வுகளை படித்திடும் 
உன் விழி அசைவுகளை பார்த்திட 
ஆசை எனக்கு !

உணர்வுகளில் உயிர்த்திருக்கும் 
என் மனதினை புரிந்திடும் 
உன் உள்ளத்து துடிதுடிப்பை உணர்ந்திட
ஆசை எனக்கு !

என் கவிதைகளை
படித்தும் புரிந்தும் மகிழ்ந்திடும் 
உன் இதழ் புன்னகையை ரசித்திட
ஆசை எனக்கு !

Wednesday, September 30, 2009

நிழலா நிஜமா.....

நிழலா நான் நிஜமா 
நிழலானால்
என்றுமே உன் அருகிலே.
நிஜமானால்
உன்னை விட்டு வெகுதூரமே….

நினைப்பதை
நிறைவேற்றுவது எளிது
நிழலில்.
ஆனால் நிஜமோ….
எதிர்பார்க்கவைத்து……
காத்திருக்கவைத்து…… 
ஏங்கவைக்கும்…………………

நிழலோ
கனவு காணவைக்கும்.
நிஜமோ
உன்னையே மறக்கவைத்துவிடும்.
வேண்டாம் அன்பே
வாழ்க்கையே மாற்றிவிடும்
நிஜம் - உன்னனவிட்டு 
விலகியே இருக்கட்டும்.
நிழலாக என்றும் 
உன் நினைவுகளில் !

Monday, September 28, 2009

வினா ???

«விடை தெரியா வினாக்கள்
ஓராயிரம் உன்னிடம்» என்றாய்
இன்று விடையளித்தபடி நான்
வினாக்களே இன்றி
என்றாவது அவற்றின்
ஆழம் தெரியுமானால்
அர்த்தம் புரியுமானால்
விடைகள் தேடிவரும்
வினாவாக வருவாயா…

Monday, September 21, 2009

உரிமையுடன்......

னவே கனவாகி போனதால் 
இன்னும்கூட கனவிலே.....
இன்றும்கூட !
உரிமைகளை உரிமையுடன் 
பறித்துக்கொண்டு
நீ செய்கின்ற செயல்களை 
என்னவென்று சொல்ல ?
எப்படி வார்த்தைகள் கொண்டு எழுத ?
என்றாவது ஒருநாள் 
உனக்கும் இதே கனவு 
வருமாயின் நிச்சயம் 
உணர்ந்துக்கொள்வாய் 
இன்று என் நிலையை !

Friday, September 18, 2009

தேடல் !!!



அப்படி என்னதான் இருக்கிறது
நம் இருவர்க்கும் இடையில் ?

பார்த்த முதல் நாளில் இருந்து
இன்றுவரை புதிதுப் போலவே !
வருடங்கள் பலவாகியும்
மாற்றங்கள் வாழ்வில் கொண்டும்
உள்ளம் மட்டும் மாறாமல்
அல்லது மாற்றிக்கொள்ள விரும்பாமல்
எதை எதிர்ப்பார்த்து
இத்தேடல் தொடர்கிறது !

பலமுறை நெருங்கிவர முயன்று
ஒவ்வொருமுறையும்
ஏதோ ஒரு காரணத்தால்
மீண்டும் மீண்டும் பிரிந்து
மனதால் மட்டும்
இன்னும் பிரியாமலே……
அப்படி என்னதான் இருக்கிறது
நம் இருவர்க்கும் இடையில் ?

சொல்லிவிடு
உனக்கு தெரிந்தால் !

Monday, September 14, 2009

கேட்டுக்கொண்டே இருப்பேன்........

"நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் 
காலம் முழுதும் 
பேசுவது நீயானால்!" -  சொன்னது 
நீயானதால் 
எனக்கும் ஆசைதான் 
பேசிக்கொண்டே...... இருந்திட.
கால நேரம் மறந்து 
என் இன்பத் துன்பங்களையும்........ 
என் உணர்வுகளையும் உன்மைகளையும்......... 
போதுமென உனக்கு 
சலிக்கும் வரையிலாவது !!!

Wednesday, September 9, 2009

புதிராக ஒரு கனவு......

புரியாத புதிராக வருகிறது
உன்னைப் பற்றிய கனவு
ஒவ்வொன்றும்
ஒரு அழகான கவிதையாக !

கனவினாலே
நினைவுகளில் நிறைந்து
முத்தங்களால் ஆன கனவிது !

விலகி நிற்கும் உன்னை
நெருங்க வைக்கிறேன்
என் விழி பார்வையால்
இருந்தும் ஏதோ
தயக்கம் உனக்கு.

இம்முறை என்னுடையது போல்……
உனது சட்டையைப் பற்றி
இழுத்து அனைத்துக்கொள்கிறேன்
என் இதழ் ஸ்பரிசத்திற்காக
காத்திருந்த உனது ஏக்கத்தை
வெளியேற்றுகிறேன்
அழுத்தமான ஒரு முத்தம்
நீண்டு........ நீண்டுக் கொண்டே போகிறது……….
ஆழமான பார்வையுடன் !

காத்திருந்து கிடைத்ததில்
சந்தோஷம் உனக்கு !
பரிசாக நீயும் தந்தாய்
என் கண்களின்மேல்
கவிதையாய் ஒரு முத்தம் !


No comments:

Post a Comment